கோவை விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெறுகிறது.
உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக விஜயா வாசகர் வட்டம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. 4ஆவது ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் டி - அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமை வகிக்கிறார். விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்கிறார். விருதாளர்கள் குறித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அறிமுக உரையாற்றுகிறார். இந்த விழாவில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் அம்சப்பிரியா, கே.என்.செந்தில், வெ.செல்வமணி, ஆர்.ராஜ் ஆனந்த் ஆகியோர் விருது பெறுகின்றனர்.
பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் ராமராஜன், எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, பேராசிரியர் கரசூர் கந்தசாமி ஆகியோர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசுகின்றனர். இதைத் தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரையாற்றுகின்றனர்.
நிகழ்ச்சியை முனைவர் உஷாராணி தொகுத்து வழங்குகிறார். எழுத்தாளர்கள், நூலகர், புத்தக விற்பனையாளர்களை கெளரவிக்கும் இந்த விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் மு.வேலாயுதம் கேட்டுக் கொண்டுள்ளார்.