கோவையில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 351 கிலோ அழுகிய பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கருப்பக் கவுண்டர் வீதி, பெரியகடை வீதி மற்றும் வைசியாள் வீதிகளில் உள்ள பழ குடோன்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 220 கிலோ மாம்பழம், 65 கிலோ ஆரஞ்சு, 32 கிலோ சாத்துக்குடி மற்றும் 34 கிலோ மாதுளை உள்ளிட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது: மாங்காய் வரத்து அதிகம் உள்ள காலங்களில் கார்பைடு கல் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து வியபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதுபோல, செயற்கையாக பழுக்க வைத்தப் பழங்களை சாப்பிடுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன.
எனவே, ஒவ்வொரு சீசனிலும் பழங்கள் வைக்கப்பட்டுள்ள குடோன்களில் கார்பைடு கல் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் மாங்காய் சீசன் வரத்து தொடங்கியுள்ளன. திருநெல்வேலி, செங்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு அதிக அளவில் மாங்காய் கொண்டுவரப்படுகிறது. பிற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் மாங்காய்கள் கோவை வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டு சில்லறை விற்பனைக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், பழ குடோன்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கார்பைடு கல் பயன்படுத்தவில்லை. இருந்தும் பழங்கள் விற்பனையாளர்களிடம் கார்பைடு கல் பயன்படுத்துவது கண்டுப்பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.