அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குன்னத்தூராம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அன்னூர்

குன்னத்தூராம்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அன்னூர் பேரூராட்சி  அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னூர் பேரூராட்சிக்கு உள்பட்ட குன்னத்தூராம்பாளையத்தில் 1.10 ஏக்கர் மந்தை புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி இருந்தனர். 
இந்நிலையில், குன்னத்தூராம்பாளையத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டினால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில் இதை கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்டோர்  அன்னூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில்  ஈடுபட்டனர். 
தகவலறிந்து அங்கு வந்த அன்னூர் காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தார். 
மேலும் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  
இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போரட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com