கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் இருவர் கைது

கோவையில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கோவையில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனர்.
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் அபுதாகீர் (43). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது போத்தனூர், மதுக்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இதன் காரணமாக இவர் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்கும் தொழிலை கைவிட்டிருந்தார். இந்நிலையில், குனியமுத்தூர் ரெயின்போ காலனி பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் குனியமுத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த அபுதாகீர், தன்னைத் தாக்கியவர்கள் குறித்த விவரங்களை போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதன்பேரில் இடையர்பாளையத்தைச் சேர்ந்த கோபி, குனியமுத்தூரைச் சேர்ந்த முஹமது ஹுசைன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா கேட்டு தராத ஆத்திரத்தில் கோபி, முகமது ஹூசைன் ஆகியோர் தங்களது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அபுதாகீரைக் காரில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அபுதாகீர் மயங்கியதையடுத்து அவரை சாலையோரம் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அபுதாகீர் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் கொலை வழக்காகப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அராத் நிஜார், ஆனந்த், பாவா, முஜிபுர் ரஹ்மான், ஜமீல் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com