முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கேரளத்துக்கு பேருந்தில் கடத்திய ரூ.7 லட்சம் தங்கக் காசுகள் பறிமுதல்
By DIN | Published On : 04th August 2019 09:25 AM | Last Updated : 04th August 2019 09:25 AM | அ+அ அ- |

கோவையில் இருந்து கேரளத்துக்கு பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கக் காசுகளை பாலக்காடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு, சந்திரா நகர் பகுதியில் போலீஸார் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்தில் தங்கக் காசுகள் கடத்தப்படுவதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவையில் இருந்து பாலக்காடு நோக்கிச் சென்ற கேரள அரசுப் பேருந்தில் உள்ள பயணிகளின் உடைமைகளை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது கோட்டயம், எலம்பள்ளியைச் சேர்ந்த முருகன் (50) வைத்திருந்த கைப்பையை பரிசோதித்ததில் அந்தப் பையில் 240 கிராம் தங்கக் காசுகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
இந்தத் தங்கக் காசுகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கக் காசுகளை போலீஸார் பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.