மேட்டுப்பாளையம் அருகே குன்னூர், கோத்தகிரி சாலைகளில் மேட்டுப்பாளையம் வனத் துறையினருடன் இணைந்து தன்னார்வ அமைப்பினர் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கோத்தகிரி, குன்னூர் சாலைகளில் நேச்சுரல் லவ்வர்ஸ், டபுள்யூ.என்.சி.டி இயற்கை ஆர்வலர்கள், பண்ணாரியம்மன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ - மாணவிகள், மேட்டுப்பாளையம் வனச் சரக பணியாளர்கள் என மொத்தம் 250 பேர் ஞாயிற்றுக்கிழமை வனத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் டெபாசிஸ் ஜனா வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் மேற்பார்வையில் வனவர் முத்துகிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம், வனக் காப்பாளர்கள் தர்மராஜ், பிரகாஷ், அண்ணாமலை, வனக் காவலர் நாகராஜ், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பங்கேற்றனர்.