முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் மீது வனத் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, மருதமலை அருகே உள்ளது சோமையம்பாளையம். இப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றனர்.
அப்போது அங்கு முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ராஜா (29), ரஞ்சித் (20), மணிமுத்து (19) என்பது தெரியவந்தது.
மேலும், கோவையில் தங்கி கூலி வேலை செய்து வரும் இவர்கள் ஓய்வுநேரங்களில் முயல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிந்த வனத் துறையினர், அவர்களிடம் இருந்து முயல் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட சுருக்கு கம்பி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.