கோவை, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 3 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில், உரம் தயாரிப்புக் கூடத்துக்கு அருகில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை தீப்பிடித்தது. குப்பைக் கிடங்கில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவுக்குப் பரவிய தீயை, தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் 10 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்நிலையில் இந்த குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மீண்டும் தீப்பிடித்தது. இதுகுறித்து கிடங்கு மேற்பார்வையாளர் பீளமேடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.