கார்-இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் சாவு
காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை மார்க்கெட், தெற்கு மாரத்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சந்தோஷ்குமார் (21). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையத்தில் உள்ள ராயர் ஆத்தூர் கோயிலுக்கு தனது தாத்தா முருகசாமியுடன் (75) ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார்.
செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி சாலையில் உள்ள சிட்கோ பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது எதிர்திசையில் வந்த கார் சந்தோஷ்குமாரின் வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் காயமடைந்த காரை ஓட்டி வந்த குறிச்சியைச் சேர்ந்த ஞானசெல்வனை (37) அவ்வழியே சென்ற பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த செட்டிபாளையம் போலீஸார் உயிரிழந்த சந்தோஷ்குமார், முருகசாமி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.