நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறுமுகை பேரூராட்சியில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட இடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் போதுமான அளவில் சுகாதாரம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின்பேரில் சிறுமுகை பேரூராட்சியில் இருந்து 11 பேர் கொண்ட குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திங்கள்கிழமை சென்றனர்.
இவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வாகன வசதிகளை பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா செய்து கொடுத்து வழியனுப்பி வைத்தார்.