ஆழியாறு அணையில் படகு ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் தண்ணீரில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை மாயமானார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு படகு சவாரி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இங்கு படகு ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் பிரான்சிஸ் (64). இந்நிலையில், ஆழியாறு அணையில் மையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதனை சிறிய படகு மூலம் சென்ற பிரான்சிஸ் படகில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதாக தெரிகிறது. அப்போது, தண்ணீரில் தவறி விழுந்து அணை நீரில் மூழ்கியுள்ளார். அவர் தண்ணீரில் தத்தளித்தபோது, சப்தம் போட்டதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆழியாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பேலீஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் பிரான்சிஸ் நீரில் மூழ்கிவிட்டார். தொடர்ந்து இரண்டு நாள்களாக போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பிரான்சிஸின் உடலைத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நேரத்திலும் படகில் இருந்த தண்ணீரை அகற்ற கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதால்தான் பிரான்சிஸ் தண்ணீரில் மூழ்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.