பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியை அடுத்த தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் சமத்துவபுரம் உள்ளது. இந்தப் பகுதியில் 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு கடந்த 12 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது அவர் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என்று கோரியும், சேதமடைந்த கட்டடங்களை சீரமைத்து தரக் கோரியும், தங்கள் வீடுகளின் முன்பும், சமத்துவபுரம் நுழைவாயிலிலும் கருப்புக் கொடிகளை கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீஸார் கருப்புக் கொடிகளை அகற்றினர். இதையடுத்து, குடிநீர் விநியோகம் புதன்கிழமை காலையில் செய்யப்பட்டது.