தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ ஆணையத்துக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதாவை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு, 6 மாத சான்றிதழ் படிப்பு உள்பட பல்வேறு ஷரத்துகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நெக்ஸ்ட் தேர்வு உள்ளிட்ட சில ஷரத்துகளை நீக்க வலியுறுத்தி கடந்த சில நாள்களாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால் போலி மருத்துவர்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். எனவே, தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அத்துடன் மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இக் கோரிக்கையை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனை வளாகத்தில் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.