கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மாரடைப்பு மற்றும் இருதய ரத்தக் குழாய்களின் முழு அடைப்புக்கான அறுவை சிகிச்சை இல்லாத அதிநவீன சிகிச்சை முறை பற்றிய கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் தலைமை தாங்கினார். ஜப்பான் யோகோஹாமா பல்கலைக்கழகத்தின் இருதயவியல் துறை இயக்குநர் கசுஹிரோ ஆஷிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஜப்பானில் இருதயச் சிகிச்சை செய்வதில் பின்பற்றப்படும் நவீன தொழில் நுட்பம் குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் பேசியதாவது:
ஜப்பானில் பின்பற்றப்படும் அறுவை சிகிச்சையில்லாத அதிநவீன இருதயச் சிகிச்சை செய்வதற்கு, நவீன ஆய்வகம் மற்றும் உபகரணங்கள், கருவிகள் தேவைப்படுகின்றன. இதற்கு சர்வதேச மருத்துவ உதவி அமைப்பான "ஜிகா" வின் ஒத்துழைப்போடு, ரூ.2 கோடி மதிப்பில் நவீன உபகரணங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை செய்து கொண்ட மறுநாளே, நோயாளிகள் எழுந்து நடக்கலாம். தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் வாரத்துக்கு 2 இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. வருங்காலங்களில், ஜப்பான் நாட்டு அதி நவீனச் சிகிச்சை முறை பின்பற்றப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் சடகோபன், இருதயவியல் துறைத் தலைவர் நம்பிராஜன் உள்பட மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.