கனமழைக்கு பின் பெய்து வரும் சாரல் மழை காரணமாக தொடர்ந்து 13 ஆவது நாளாக முழு கொள்ளளவில் சோலையாறு அணை உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையில் சோலையாறு அணை நிரம்பியது. அதன்பிறகு வெயில் அதிகரித்ததால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் 160 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் துவங்கி கடந்த மே மாதத்தில் 10 அடியை எட்டி அணை வறண்டது.
தடுப்பனைகளும் வறண்டு குடிநீர்த் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவ மழை பெய்யத் துவங்கியது. ஆரம்பத்தில் சாரல் மழையாகவே பெய்து வந்தது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் குறைவான மழையே காணப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் கனமழை பெய்யத் துவங்கியது.
இதனால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியது. இதில் 7 ஆம் தேதி துவங்கி நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து பெய்த கனமழையால் அணையின் முழுக் கொள்ளளவான 160 அடிக்கு மேல் உயர்ந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி அணை நிரம்பியது.
அதன்பிறகு கனமழை பெய்யாவிட்டாலும் சாரல் மழை பெய்வதால் கடந்த 13 நாள்களாக அணை முழுக் கொள்ளளவிலேயே உள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணைக்கு 1,794.56 கனஅடி நீர்வரத்தாக இருந்தது.
அணையில் இருந்து 1,963.54 கனஅடி நீர் வெளியேறப்பட்டு வந்த நிலையில் தற்போது, அணையின் நீர்மட்டம் 160.95 அடியாக உள்ளது. வியாழக்கிழமை பதிவான மழை அளவு (மி.மீ) விவரம்: சின்னக்கல்லாறு 44, நீராறு அணை 28, வால்பாறை 16, சோலையாறு அணை 14 .