கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் தெய்வசிகாமணி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதித் தேர்வை, கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி நடத்துகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 5ஆயிரம் மீட்டர், 10ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது. உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல், ஈட்டி எரிதல் போன்ற போட்டிகளும், 5 கிமீ, 10 கிமீ நடைபந்தயமும் நடைபெறுகிறது.
இதற்காக www.kdmaa.in என்ற இணையதளமும் துவக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய இயலாதோர் நேரு ஸ்டேடியத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை பதிவு செய்யலாம். பதிவு செய்ய செப்டம்பர் 20 இறுதி நாளாகும்.
போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு இடங்களைப் பிடிப்போர், திருச்சியில் தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.