மேட்டுப்பாளையத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை குழந்தை பிறந்தது.
மேட்டுப்பாளையம் அருகே குமரன்குன்று பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் காளிமுத்து (41). இவரது மனைவி தங்கமணிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் உள்ள சக்தி திரையரங்கு அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசவ வலி அதிகரிக்க ஆம்புலன்ஸ் நடத்துநர் நந்தகோபால், உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் இணைந்து ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தங்கமணிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் தங்கமணிக்கு 2.25 எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தாயையும், குழந்தையையும் சேர்த்தனர். அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் பணியாளர்களைப் பாராட்டினர்.