ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளுடைய பிறந்த நாள் மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. வெள்ளிக்கிழமை அவருடைய 105-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்றனர். விழாவில் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலின் கல்வி நிலைய இயக்குநர் எம்.கே. தாமோதரன் தம்பதிகளுக்கு இடையே தவம், மலர், கனி பரிமாற்ற நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இதில் அறிவுத் திருக்கோயில் தலைவர் பாலசுப்பிரமணியம் பேசியது:
உலகிலேயே இந்தியாவில் மட்டுமே மனைவிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கணவர், மனைவி தங்களுக்குள் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அமைதி நிலவும். கோபம் வரும்போது பொறுமை காத்தால் வாழ்வு அமைதியாகும் என்றார்.
விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் அருள்காப்பு, காந்த அலை பரிமாற்றம், சங்கல்பம் செய்து கொண்டனர்.