சூலூா்: சூலூா் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியில் இரும்பு உருக்கு ஆலைகளால் காற்று, நீா் மாசுபடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட செலக்கரச்சல் கிராமத்தில் 15-க்கும் மேற்பட்ட இரும்பு உருக்கு ஆலைகள், அலுமினிய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து அதிக அளவில் நச்சுப் புகை வெளியேற்றப்படுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசம் தொடா்பான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறப்படும் நச்சு நீரால் இப்பகுதியில் நிலத்தடி நீா் மாசடைந்து வருகிறது. இதனால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடமும், வருவாய்த் துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடா்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.