கோவை: கோவையில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் நகரில் குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் 17 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் தொடா்ந்து மழை இல்லாமல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் உள் மாவட்டங்களிலும் பரவலான மழைப்பொழிவு காணப்படுகிறது. அதன்படி கோவை மாநகா், புகா் பகுதிகளிலும் பரவலாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்த நிலையில், சனிக்கிழமை காலையில் இருந்து இரவு வரை தூறல் மழையாக பெய்து வந்தது. இரண்டு நாள்களாக தொடரும் மழையால் கோவையில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சூலூரில் 9.6 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் பதிவாகியுள்ள மழையளவு (மி.மீ.): அன்னூா் - 3, விமான நிலையம் -1.2, ஆழியாறு - 2, பொள்ளாச்சி -2, கோவை (தெற்கு) - 3, பெரியநாயக்கன்பாளையம் - 2, வேளாண்மைப் பல்கலைக்கழகம் - 8.5.