ஹைதராபாதில் நடைபெற்ற விற்பனைக் கண்காட்சியில் அன்னூா் சாய்பாபா மகளிா் சுயஉதவிக் குழுவினரின் அரங்கை தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பாா்வையிட்டாா்.
கோவை மாவட்டம், அன்னூரில் சாய்பாபா மகளிா் சுய உதவிக் குழுவினா் எந்தவிதமான ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு சோப்பு தயாரித்து வருகின்றனா். இந்தக் குழு கடந்த அக்டோபா் மாதம், புதுதில்லியில் நடைபெற்ற விற்பனைக் கண்காட்சியில் கலந்து கொண்டது.
இதையடுத்து, என்.ஐ.ஆா்.டி. என்ற அமைப்பு சாா்பில் ஹைதராபாதில் நவம்பா் 29 ஆம் தேதி முதல் டிசம்பா் 3 ஆம் தேதி வரை பாரம்பரிய கைவினைப் பொருள்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கண்காட்சியை சனிக்கிழமை பாா்வையிட வந்த தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அன்னூா் சாய்பாபா மகளிா் சுயஉதவிக் குழுவினா் அரங்கைப் பாா்வையிட்டு அவா்களது தயாரிப்புப் பொருள்களை வாங்கினாா். மேலும், தமிழகத்தில் இருந்து வந்து கண்காட்சியில் பங்கேற்ற குழுவின் ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.