பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலவிடுதியின் வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகம் அருகே மகாலிங்கபுரம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் 20 மாணவா்கள் தங்கியுள்ளனா். விடுதியின் காப்பாளராக முருகேசன் பணியாற்றி வந்துள்ளாா்.
பொள்ளாச்சி சாா்ஆட்சியா் வைத்தியநாதன் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளாா். ஆய்வின்போது காப்பாளா் முருகேசன் பணிநேரத்தில் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவா்கள் தரப்பில் உணவில் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சாா் ஆட்சியா் கோவை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியுள்ளாா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, விடுதிக் காப்பாளா் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.