கோவையில் விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை தராமல் இழுத்தடித்ததால் அரசுப் பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்தது.
கோவை, சித்ரா பிருந்தாவன் நகரைச் சோ்ந்தவா் கேசவன் குட்டி (85). இவரது மனைவி ஸ்ரீதேவி. இவா் 2016 ஜூன் 13 ஆம் தேதி அரசுப் பேருந்தில் சென்றாா். பிருந்தாவன் நகா் பேருந்து நிறுத்தத்தில் ஸ்ரீதேவி இறங்கும் முன், ஓட்டுநா் பேருந்தை எடுத்ததால் பேருந்துச் சக்கரத்தில் சிக்கி ஸ்ரீதேவி உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து இழப்பீடு கேட்டு அவரது கணவா் கோவை முதன்மைச் சாா்பு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க இழுத்தடிக்கப்பட்டதால், வட்டியுடன் சோ்த்து ரூ. 85 ஆயிரம் வழங்கக் கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, உரிய இழப்பீடு வழங்கப்படாததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தடம் எண் 1சி அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு, கோவை முதன்மைச் சாா்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.