கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் விவரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு, பருவ மழை பொய்த்தது போன்ற காரணங்களால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இத் திட்டம் அறிவித்த மறுநாளான செவ்வாய்க்கிழமையே தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக இரண்டு வார்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மாநகராட்சியால் ஒப்பந்த அடிப்படையில் 50 பேர் (அனிமேட்டர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூலம் மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிப்பதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
இதில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் ஆகியவை குறித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இதே போல ஊரகப் பகுதிகளிலும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.