கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் ஏழு நாள்களும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை-மேட்டுப்பாளையம் இடையே வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாள்களும், அதாவது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி காலையில் 8.15, 10.40, பிற்பகல் 1 மற்றும் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகள் ரயில் புறப்பட்டு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து காலை 9, முற்பகல் 11.50, மாலை 3.15 மற்றும் 5.55 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.