நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர்

தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கும் நலத்திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும்

தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கும் நலத்திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் மா.மதிவாணன் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் மதிவாணன் பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதிலுள்ள பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி ஆகிய நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத் துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் போதக காப்பாளர், காப்பாளர், சமையலர், துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய முன்மொழிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும். வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ள இனங்களில் கிராம கணக்குகளில் மாறுதல்கள் மேற்கொள்ளப்படாத இடங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மதுராந்தகி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநர் ஜோதிமணி, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com