கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) வெடித்த விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ராசக்காபாளையம், திருமலை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல் (80). இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
சண்முகவடிவேல் வீட்டின் அருகே இருந்த குப்பையில் செவ்வாய்க்கிழமை மதியம் தீப்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து தீ பரவி சண்முகவடிவேலின் வீட்டிலும் பற்றியுள்ளது. இதில் அவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையில் தீப் பிடித்து வெடித்துள்ளது.
சண்முகவேல் கண்பார்வை தெரியாதவர் என்றும், அவரது மனைவி நடக்க முடியாதவர் என்றும் கூறப்படுகிறது. இதனால், வீட்டுக்கு உள்ளே இருந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர். மகள் லட்சுமிதேவி வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். மகன் வெளியூர் சென்றிருந்தார். பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மகாலிங்கபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.