வால்பாறை பகுதியில் தொடர்ந்து யானைகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஓட்டியுள்ள வனங்களில் உள்ள யானைகள் வனத்தை விட்டு வெளியேறி தொடர்ந்து தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள பகுதிகளிலேயே முகாமிட்டுள்ளன.
இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று குடியிருப்புகளை முட்டி தள்ளி உள்ளிருக்கும் பொருள்களை சேதப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு திங்கள்கிழமை இரவு சென்ற யானைகள், அங்கு வசிக்கும் பெருமாள் என்பவரது குடியிருப்பை தாக்கின.
இதைத் தொடர்ந்து, பெருமாள் அருகில் வசிப்பவர்களுக்கு செல்லிடப்பேசி மூலம் இதுகுறித்து தகவல் தெவித்துள்ளார். இதையடுத்து தீப் பந்தங்களுடன் வந்த நபர்களை பார்த்த யானைகள் மெதுவாக அப்பகுதியை விட்டு சென்றன. இச்சம்பவம் தொடர்பாக வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.