தேசிய பங்குச் சந்தை நடத்திய விநாடி-வினா போட்டியில் ஜி.ராமசுவாமி நாயுடு பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
தேசிய பங்குச் சந்தை சார்பில் கோவை மாவட்ட அளவில் விநாடி-வினா போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், பீளமேடு ஜி.ராமசுவாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தேசிய அளவில் தேர்வானார்கள். இதையடுத்து மும்பையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 12) நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 225 பள்ளிகளில் இருந்து 40 ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்ற இப்போட்டியில் 15 குழுக்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது. இறுதிச் சுற்றில் ஜி.ராமசுவாமி நாயுடு பள்ளி மாணவர்களான எம்.சோம்நாத், ஏ.விக்னேஷ்வரன் ஆகியோர் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர். இவர்களுக்கு பதக்கமும் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சீதா பூவையா வாழ்த்துகளைத் தெரிவித்தார்.