கோவையை அடுத்த செட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 8 பவுன் நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி நித்யாதேவி (35). இவர், ஒத்தக்கால்மண்டபம் அருகே ஏலூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில் தனது 8 பவுன் நகையை கழற்றி கைப்பையில் வைத்து அதை வாகனத்தில் பெட்டியில் வைத்து புறப்பட்டு சென்றார்.
வழியில் பொருள்கள் வாங்குவதற்காக கடையின் வளாகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் வந்துபார்த்தபோது இருசக்கர வாகனத்தில் இருந்த நகை வைத்திருந்த கைப்பையை காணவில்லை. இதுகுறித்து அவர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.