பொங்கல் பண்டிகையொட்டி கோவையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜனவரி 14 ஆம் தேதி வரையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந் நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி பெரும்பாலான மக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆகவே போருந்துகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் சார்பில் பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக ஜனவரி 14 ஆம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி மற்றும் பல்வேறு ஊர்களுக்கு பயணிகள் செல்ல வசதியாக ஜனவரி 10 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், சென்னை ஆகிய ஊர்களுக்கு ஜனவரி 14 ஆம் தேதி வரையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அனைத்து பேருந்து நிலையத்திலும் 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண்மை இயக்குநர் ஆர்.முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.