தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 56 பேர் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு பாராட்டு விழா கோவையில் நடந்தது.
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான மூத்தோர் தடகளப்போட்டி தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது. அதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்காணக்கான மூத்த தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்டம் சார்பில் 35 வயது முதல் 80 வயது வரையுள்ள 70 பேர் பங்கேற்று 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 800 மீட்டர், 400 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், குண்டு சங்கிலி எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு 19 தங்கம், 18 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்றனர்.
இதில் தங்கப் பதக்கம் வென்றவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையில் நடைபெறும் தேசிய மூத்தோர் தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்களுக்கு கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் வி.பாலசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.ராதாமணி முன்னிலை வகித்தார். விழாவில் அதிக பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பதக்கம் வென்ற அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கி சங்க நிர்வாகிகள் கெளரவித்தனர்.