கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்புதூரிலிருந்து தெற்குபாளையம் செல்லும் சாலையில் பொதுமக்கள், விவசாயிகள் பங்களிப்புடன் ரூ. 25 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட தரைமட்டப் பாலம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போர் சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி கேட்டு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் தரைமட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவுக்கு அதிமுக நகரச் செயலாளர் குருந்தாசலம், அதிமுக ஒன்றியச் செயலாளர் கோவனூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவை வடக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருலான பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் தலைமை வகித்து பாலத்தைத் திறந்து வைத்தனர்.
புதுப்புதூர், தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர் பகுதியில் வசிப்போர் இந்தப் புதிய பாலம் வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்ல சுமார் 4 கி.மீ. தொலைவு குறையும் எனத் தெரிவித்துள்ளனர்.
குப்புஜெயம், முன்னாள் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, குணா, செல்வராஜ், நகர் நலச் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.