குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் குமரகுரு தமிழ் மன்றம் இணைந்து நடத்தும் தமிழ் அறிவுத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் மழலைத் தமிழ் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் சரவணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் 180 பேர் கலந்துகொண்டனர். இதில் இவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, விநாடி வினா போட்டி, கட்டுரைப் போட்டி, திறன் வெளிப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான சனிக்கிழமையன்று (ஜனவரி 19) வையத் தலைமை கொள் என்றத் தலைப்பில் தமிழ் ஆர்வலர்களின் பேச்சுத் தொடர், நிறைவு நாளான திங்கள்கிழமை (ஜனவரி 21) அருட்செல்வர் மகாலிங்கம் சுழற்கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.
இதைத் தொடர்ந்து நிறைவு விழாவில் விழா மலரும், குமரகுரு தமிழ் மன்றத்தின் ஒருபகுதியான தமிழ் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நித்திலம் அமைப்பின் சின்னமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.