வால்பாறை அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர் வால்பாறை அமீது (ஏ.டி.பி.) தலைமை வகித்தார். கருப்பையா (ஏ.ஐ.டி.யூ.சி.), சௌந்திரபாண்டியன் (எல்.பி.எப்.) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளைச் சுற்றியும் செடிகள் வளர்ந்து புதர்கள் போல் காட்சியளிக்கின்றன. இதனை நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய முன்வருவதில்லை. போதுமான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படாததால் தொழிலாளர்கள் அவசர சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. வன விலங்குகள் தாக்கிதொழிலாளர் உயிரிழக்குபோது அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்டேட் நிர்வாகத்தினர் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். கேரள மாநிலத்துக்கு இணையான சம்பளம் வழங்க முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மோகன், மாணிக்கம் (ஏ.ஐ.டி.யூ.சி), வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), சுந்தர்ராஜன், எட்வர்டு, அருணகிரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.