ஆழியாறு அணையில் படகில் சிக்கித் தவித்த இளைஞர்கள் மீட்பு
ஆழியாறு அணையில் மதுபோதையில் படகில் சென்று சிக்கித் தவித்த 4 இளைஞர்களை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
ஆழியாறு அணையில் பேரூராட்சி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயந்திரப் படகுகள் இயக்கப்படுகின்றன. படகை பேரூராட்சி ஊழியர்கள் இயக்கி வருகின்றனர். இயந்திரப் படகுகளை இரவு நேரத்தில் கரையோரத்தில் நிறுத்தினால் அணை சுவரில் மோதி சேதமடையும் என்பதால் அணை நீரில் சற்றுத்தொலைவு உள்ளே சென்று நிறுத்தி வைப்பது வழக்கம்.
மீண்டும் அடுத்த நாள் என்ஜின் படகை கரைக்கு எடுத்துவர சிறிய துடுப்பு படகை பயன்படுத்தி வருகின்றனர். இந்த துடுப்பு படகு கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், கோவையில் இருந்து ஆழியாறு அணைக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்திருந்த இளைஞர்கள் நான்கு பேர் கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த துடுப்புப் படகில் ஏறி அணையின் மையப் பகுதிக்கு சென்றுவிட்டனர். பிறகு மீண்டும் கரைக்கு வரமுடியாமல் தவித்தனர். இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள், மீனவர்களை வரவழைத்தனர். மீனவர்கள் நீந்திச்சென்று துடுப்புப் படகில் சிக்கித் தவித்த 4 இளைஞர்களை பத்திரமாக மீட்டனர்.