கோவையில் காவல் சார்பு ஆய்வாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை, போத்தனூர் கோணவாய்க்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). இந்து முன்னணி அமைப்பின் கோவை தெற்கு மாவட்டச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து சுரேஷ் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தனக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போத்தனூர் சார்பு ஆய்வாளர் உதயகுமார், சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போலீஸார் கூறிய காரணத்தை ஏற்க மறுத்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி போலீஸாரை மிரட்டினார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.