சேவை குறைபாடு காரணமாக கோவையைச் சேர்ந்த தனியார் வாகன விற்பனையகத்துக்கு அபராதம் விதித்து, கோவை நுகர்வோர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, இடையர்பாளையம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் நரசிம்மன் (54). இவர் உக்கடத்தில் உள்ள தனியார் வாகன விற்பனையகத்தில் ரூ.6 லட்சத்துக்கு வாகனம் ஒன்றை 2013ஆம் ஆண்டு வாங்கினார். இந்நிலையில் சில மாதங்களில் வாகனத்தின் கியர் பாக்ஸில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட இலவச சர்வீஸின்போது பழுது நீக்கப்பட்டது. இருப்பினும் மீண்டும் சில நாள்களில் இதே கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிறுவனத்தினர், நரசிம்மனைத் தரக்குறைவாகவும் பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நரசிம்மன், சேவை குறைபாடு காரணமாக தனக்கு புதிய வாகனமும், ரூ.1 லட்சம் இழப்பீடும் வழங்கக்கோரி 2013ஆம் ஆண்டு நவம்பரில் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் ஆணையத் தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர்கள் அமுதம், பிரபாகர் ஆகியோர், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக ரூ.75 ஆயிரத்தை, வழக்குத் தொடர்ந்த ஆண்டில் இருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறும், வழக்குச் செலவுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குமாறும் தீர்ப்பளித்தனர்.