திருப்பூர், பொள்ளாச்சியில் விரைவில் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு மையங்கள்: மண்டல கடவுச்சீட்டு அலுவலர் தகவல்

திருப்பூர், பொள்ளாச்சியில் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மையங்கள் விரைவில் அமைக்கப்படும்

திருப்பூர், பொள்ளாச்சியில் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் ஜி.சிவக்குமார் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் ஜி.சிவக்குமார் திங்கள்கிழமை கூறியது:
கடவுச்சீட்டு அலுவலகங்களில் சிறந்த சேவைக்கான மத்திய அரசின் விருதை கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் இந்த ஆண்டு பெற்றுள்ளது. 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக கடவுச்சீட்டுகளை பதிவு செய்யும் வகையில் செயல்படுவது, சுட்டுரை மூலம் வரும் புகார்களுக்கு நிவாரணம் அளித்தல், ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதிலளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் கோவை மண்டல கடவுச்சீட்டு மையத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலும் அதன் பின்னர் தற்போது என மொத்தம் 6 முறை இந்த விருது, கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்துக்கு உள்பட்ட நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு மையங்கள் உள்ளன. தற்போது புதிதாக கடவுச்சீட்டு பெறுபவர்களில் 20 சதவீதம் பேர் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு மையங்கள் மூலமாகதான் கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள அஞ்சல் மையங்களில் கடவுச்சீட்டு மையங்கள் விரைவில் அமைக்கப்படும். அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு மையங்கள் அமைக்க 300 சதுர அடி இடம் தேவைப்படுவதால் தாமதமாகி வருகிறது. அடுத்த சில மாதங்களுக்குள் இரு ஊர்களிலும் அஞ்சல் நிலைய கடவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்படும்.
2009ஆம் ஆண்டில் கோவை மண்டல கடவுச்சீட்டு மையம் மூலம் 90ஆயிரம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் 1.81 லட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. நிழாண்டில் இதுவரையில் 54ஆயிரம் கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 
தத்கல் முறையில் பதிவு செய்யப்படும் கடவுச்சீட்டுகள் அதிகபட்சம் மூன்று நாள்களுக்குள் வழங்கப்படும். 
 கோவை மண்டலத்தைப் பொருத்தவரையில் சராசரியாக 8 நாள்களுக்குள் கடவுச்சீட்டு வழங்குவதற்கான காவல் துறை விசாரணை முடிக்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களை விட குறைவான கால அளவு என்பது குறிப்பிடத்தக்கது. 
ஐரோப்பிய நாடுகளில் உள்ளதுபோல மைக்ரோ சிப்கள் பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இந்த புதிய கடவுச்சீட்டு முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும். இதன்மூலம் போலி கடவுச்சீட்டு தயாரிப்புகள் முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com