பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இவர்கள் மீதான முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த மே 24ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவர்கள் 5 பேரும் அண்மையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களது நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் சேலம் சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஐந்து பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 15 ஆம் தேதி வரை நீட்டித்து தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் கே.ஆர்.கண்ணன் (பொறுப்பு) திங்கள்கிழமை உத்தரவிட்டார்.