கோவை அருகே மற்றொருவருக்கு செந்தமான நிலத்தை மோசடியாக விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை, பி.என்.புதூரைச் சேர்ந்தவர் மோகன் (48). இவர், கோவை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனக்குச் சொந்தமான மூன்றரை சென்ட் இடம் ராம் நகரில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.86 லட்சம் ஆகும். இந்த இடம் வழக்கு விசாரணைக்கு பின்னர், கோவை முன்ஷிப் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மூலம் எனக்கு 2011ஆம் ஆண்டு கிரயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த இடத்தை ராம் நகர், ராஜரத்தினம் வீதியைச் சேர்ந்த போலோநாத் ஜெய்ஸ்வால் (43), அவரது சகோதரர் சந்திரிகா பிரசாத் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து, மூன்றாவது நபர் ஒருவருக்கு ரூ.86 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேசி, ரூ.26 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.
இது தொடர்பாக விசாரித்து, எனது இடத்தை விற்பனை செய்து மோசடி செய்த போலோநாத் ஜெய்ஸ்வால், சந்திரிகா பிரசாத் ஜெய்ஸ்வால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போலோநாத் ஜெய்ஸ்வாலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரிகா பிரசாத் ஜெய்ஸ்வாலை போலீஸார் தேடிவருகின்றனர்.