கோவையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டியில் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை சர்வஜனா பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான பி.எஸ்.ஜி. கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் சிபிஎஸ்இ பள்ளி முதல் சுற்றில் பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளியை 6-0 என்ற கோல் கணக்கிலும், 2ஆம் சுற்றில் கோவை எலிக்ஸ் பப்ளிக் பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கிலும், 3வது சுற்றில் கோவை ஸ்ரீராகவேந்திரா பள்ளியை 3-1 என்ற கோல் கணக்கிலும் வென்று இறுதிப் போட்டிக்குத் தேர்வானது.
இறுதிப் போட்டியில் கோவை டாக்டர் பி.ஜி.வி. பள்ளியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்று பி.எஸ்.ஜி. ஹாக்கி கோப்பையை சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய சச்சிதானந்தா பள்ளி மாணவர் ச.சைலேஷ் சுப்பிரமணியன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, பள்ளி செயலாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வெ. கணேசன், பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சு.சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.