புதிய தேசிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியுள்ளார்.
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 தொடர்பான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு மா.நேருதாசு தலைமை வகித்தார். வெங்கட் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசியதாவது:
மத்திய அரசின் புதிய வரைவு அறிக்கையின்படி, புதிதாக அமைக்கப்படும் தேசியக் கல்வி ஆணையம் பிரதமரின் தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வித் துறை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் முழுக்க மத்திய அரசுக்கே என்ற நிலை உருவாகும். மாநில முதல்வர்கள் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் உருவாக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், மத்தியக் கல்வி ஆணையம் வழிகாட்டுதலில்தான் மாநிலக் கல்வி ஆணையம் இயங்கும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி, மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
புதிய வரைவு அறிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசவேயில்லை. எனவே, புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுக்க முழுக்க கூட்டாட்சித் தத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானதாகப் பார்க்க முடிகிறது என்றார். நிகழ்ச்சியில் திவிக நிர்வாகிகள் பா.ராமச்சந்திரன், யாழ் வெள்ளிங்கிரி, மோகன், இரா.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.