பொள்ளாச்சியில் மீன் லாரிகள் சிறைபிடிப்பு
சாலையில் கழிவுநீரை ஊற்றிச்சென்ற மீன் லாரிகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சிறைபிடித்தனர்.
ராமேசுவரத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளத்துக்கு கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகளில் இருந்து கழிவுநீரை தமிழகப் பகுதிகளில் சாலையோரங்களில் குழாய்கள் மூலம் ஊற்றிச் செல்கின்றனர். இதே லாரிகள் கேரளப் பகுதிக்குள் சென்றவுடன் குழாய்களை அடைத்து கழிவுநீரை ஊற்றாமல் செல்கின்றனர்.
தமிழக எல்லைப் பகுதியில் கழிவுநீரை ஊற்றிவிட்டுச் செல்வதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் நிலை உள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வந்த இரண்டு லாரிகள் சாலையில் கழிவுநீரை ஊற்றிச் சென்றுள்ளன. இதைப் பார்த்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து கோட்டாட்சியர் ரவிகுமாருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோட்டாட்சியர் ரவிகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சின்னக்காமணன் ஆகியோர் லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி அபராதம் விதித்து லாரிகளை அனுப்பிவைத்தனர்.