பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று ஏற்பாடாக மக்கக்கூடிய பயோ பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த நகராட்சி அதிகாரிகள் அறிமுகம் செய்து வைத்தனர்.
வால்பாறையை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற நகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக பொதுமக்களும் தற்போது பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணபாபு தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் ஜான்சன், திட்ட அலுவலர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மக்கக்கூடிய பயோ பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளுக்கு ஆணையாளர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் குறித்து கோவையில் இருந்து வந்திருந்த பை உற்பத்தியாளர்கள் விளக்கமளித்தனர்.
இக்கூட்டத்தில் வியாபாரிகள் பங்கேற்றனர்.