சூலூர் அருகே புறவழிச் சாலையில் கார் பழுதை சரி செய்ய வந்த ஊழியர்களை மதுபோதையில் இருந்தவர்கள் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே புறவழிச் சாலையில் தனியார் உணவகம் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரை நிறுத்தி வெள்ளிக்கிழமை மது அருந்தியுள்ளனர். பின்னர் நள்ளிரவு நேரத்தில் மது போதையில் வீட்டுக்குச் செல்ல காரை இயக்கியுள்ளனர்.ஆனால், கார் பழுதானதால் ரமேஷ்குமார் கார் முகவர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல், ராம்ராஜ் ஆகியோர் காரில் ஏற்பட்ட பழுதை நீக்க அப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, தான் புதிய கார் வாங்கி இருப்பதாகவும், கார் பழுதாகிவிட்டதால் தனக்கு புதிய காரை தருமாறு கூறி பழுது நீக்க வந்த ஊழியர்களிடம் குடிபோதையில் ரமேஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த பழுது நீக்கும் கருவியால் ஊழியர்களை ரமேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். மேலும், கார் பழுது நீக்கப்பட்டவுடன் அந்தக் காரை ஊழியர்கள் மீது ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக தெரிகிறது.
இதனைப் பார்த்த உணவக உரிமையாளார் சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதைப் பார்த்த மது போதையில் இருந்தவர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, சூலூர் காவல் உதவி ஆய்வாளர் ரத்தினசாமி ரோந்து வாகனத்தில் அவர்களை துரத்திச் சென்று சூலூர் அருகே காரை மடக்கிப் பிடித்துள்ளார். இதில் தாக்குதலில் காயமடைந்த கார் நிறுவன ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தனியார் கார் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சூலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.