சூலூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சகோதரர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சூலூர் காவல் நிலையம் அருகே போலீஸார் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சூலூர் ஜி.எச். வீதியைச் சேர்ந்த தட்சனாமூர்த்தி மகன் மனோஜ்குமார் (21) தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அவரை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வாகனத்தின் ஆவணங்கள், ஓட்டுநர் உரிமத்தை போலீஸார் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, அவரது சகோதரர் நவீனை (24) அழைத்து சம்பவ இடத்துக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த நவீன் மற்றும் மனோஜ்குமார் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளரை இருவரும் தாக்கியுள்ளனர். இதையடுத்து, இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பணியில் இருந்து போலீஸாரை தாக்கியது, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.