சட்டப் பேரவையில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) நன்றி தெரிவித்துள்ளது.
காட்மா சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கோவை கணபதி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இணைத் தலைவர் ஜே.மகேஸ்வரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலர் சி.சிவகுமார், துணைப் பொதுச் செயலர் ஜி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் மதிப்பில் வழங்கப்பட்டு வரும் அதிகபட்ச மானியம் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தொழிலை விரிவுபடுத்தவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வழங்கும் வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கோவையில் 9 ஏக்கரில் ரூ.200 கோடி செலவில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, நகர்ப்புறங்களில் பெருகி வரும் இடநெருக்கடியைத் தவிர்க்க புறநகர் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் பொருளாளர் ஜி.நடராஜன், துணைத் தலைவர்கள் டி.எஸ்.துரைசாமி, கே.எஸ்.சங்கரநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.