நலிவுற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக கோவையில் மாற்றம் மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.
நலிவடைந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவுவதற்காக மாற்றம் அறக்கட்டளை சார்பில் மாரத்தான் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு முழுவதற்குமான உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 4 ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் மீடியா பார்ட்னர்களாக பங்கேற்கும் இந்த மாரத்தான், கோவை நேரு விளையாட்டு மைதானம் பகுதியில் காலை 5 மணியளவில் தொடங்குகிறது. 5.3 கிலோ மீட்டர், 10.2 கிலோ மீட்டர், 15.1 கிலோ மீட்டர் என மூன்றுப் பிரிவுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஓடுகின்றனர்.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், முன்னாள் தடகள வீரர் சார்லஸ் பெர்ரோமியோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கிவைக்கின்றனர். கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் செயலர் வாசுகி, பெஸ்ட் என்ஜினீயரிங் பம்ப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீபிரியா கெளரிசங்கர் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்.