சூலூரில் நீர் வளம் குறித்து மத்திய அரசின் ஜல்சக்தி சிறப்புக் குழு அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சூலூர் தொகுதிக்கு உள்பட்ட சூலூர், அரசூர், குளத்தூர், நீலாம்பூர், முத்துக்கவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மத்திய அரசின் ஜல்சக்தி சிறப்புக் குழு அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் ஜல்சக்தி குழு அதிகாரிகளான மனோஜ் தெகரி, விஞ்ஞானி அனிஷா இந்த ஆய்வில் ஈடுபட்டனர். இவர்களுடன் சூலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செந்தில்குமார், நவமணி மற்றும் சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், பொறியாளர் மேனகா உள்ளிட்ட உடனிருந்தனர்.
இக் குழுவினர் சூலூர் குளத்தின் அருகே பொதுமக்கள் மற்றும் தினமணி நாளிதழ் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட சூலூர் வனத்தை பார்வையிட்டனர். அப்போது, சுற்றுச்சூழலுக்கு பலன் தரும் மரங்களை வனப் பகுதியில் வளர்க்க ஆலோசனை கூறினர். இதனையடுத்து, முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள கேபியான் தடுப்பணை, முதலிபாளையத்தில் உள்ள மரப் பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு இரண்டு மரக் கன்றுகளை நட்டனர்.
அரசூர் அருகே தனியார் தோட்டத்தில் விவசாயி நந்தகுமார் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தில் மழை நீர் வீணாகமல் கிணற்றுக்குச் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகளை பார்வையிட்டு, அவரைப் பாராட்டினர். பின்னர் கிட்டாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை, செம்மாண்டாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டை ஆகியவற்றை குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வு குறித்து தயாரிக்கப்படும் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.